டி கே சி அவர்கள் நண்பர்களின் வீட்டுக்கு வந்து தங்கினார் என்றால் அங்கே உள்ள குடும்பத்தினரின் அன்பை மட்டுமல்லாமல் அந்த வீட்டின் சூழலையும் கலை நேர்த்திகளையும் அனுபவித்துக் கொண்டே இருப்பார்.
கோயம்புத்தூரில் ஆர் கே சண்முகம் செட்டியார் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தபோது எழுதுகிறார்:
“சாப்பாடு எனக்கு ஏற்றவாறாகச் செய்தாகிறது.அதில் மிக்கச் சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள் ஜாகையோ .அரண்மனை. ,சகல வசதிகளும் அமைந்திருக்கின்றன .எல்லாம் அமெரிக்காவில் உள்ள மோஸ்தரில் இருக்கின்றன.
காலைக் காப்பி, பலகாரம் சாப்பிடுவதும் இரவு சாப்பிடுவதும் மேஜையில் தான் .சௌகரியமான வெள்ளித் தட்டுக்கள், பதினான்கு அங்குலம் அளவுள்ள தட்டுக்கள், ,அந்த அளவுக்கு குறைந்திருந்தால் சௌகரியமாக சாப்பிட முடியாது என்று தோன்றுகிறது .
இதில் நல்ல விசித்திரம், மேஜைக்கு ஒரு மேல்ப் பலகை இருக்கிறதே. அது ஒரே தோதகத்திப் பலகை. ஐந்து அடி அகலம் இருபது அடி நீளம் .அதன்மேல் கனத்த கண்ணாடி இரண்டாகப் போட்டிருக்கிறது.
பலகை வந்த மரம் ஆயிரத்து ஐந்நூறு வருஷமாக வளர்ந்த மரம் என்பதாகக் கணக்கு. வருஷம் ,நீளம், அகலம் எல்லாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அனுபவிக்க வேண்டிய காரியம்..
இதுபோக இமயத்திலிருந்து ஈழம் வரை உள்ள பிரதேசங்களில்க் கிடைத்த அற்புதமான கலைச் செல்வங்கள் ,பல! மிக அழகாக வேலைப்பாடு அமைந்த பலகை பீடங்கள், தட்டிகள், புத்த விக்கிரகங்கள், நடராஜ மூர்த்தி ,தீபங்கள் ,அபூர்வமான படங்கள் எல்லாம் வேண்டிய மட்டும்! பார்த்துப் பார்த்து அனுபவிக்க வேண்டியது> ,உள்ளம் விரிவு அடைய வேண்டியது..
புத்தகம் என்றால் பிரமாதமான லைப்ரரி. .இவைகளுக்கெல்லாம் ஊடே
நான் நடமாடிக் கொண்டு இருக்கிறேன். மனசுக்குத் தனி உற்சாகம். லட்சுமி தேவியை எப்படிக் கலைமகளுக்குத் தொண்டு செய்யச் செய்திருக்கிறது என்று வியந்து கொண்டே இருக்கிறேன்.
சாயங்காலம் ஆறு மணி முதல் ஏழு மணி வரை கம்பராமாயணத்தோடு பொழுது போக்குகிறது . 30 பேர் வருகிறார்கள். நன்றாய் அனுபவிக்கிறார்கள்
இரவுச் சாப்பாட்டுக்கு மேல் செட்டியார் அவர்கள் அவர்களுடைய உற்ற நண்பர் பழனிச்சாமி நாயுடு அவர்கள் இருவருடனும் தமிழ்ப்பண்பாட்டின் உயர்ந்த சிகரங்களைப் பற்றிப் பேசி வருகிறேன் ஒரே வியப்பு தான் அவர்களுக்கு.!
தமிழ்ப் பண்பாடும், தமிழ்க் கவியும் ஒப்பற்ற வஸ்துக்கள் தான் என்பதை இருவரும் அங்கீகரித்து ரொம்ப ரொம்ப அனுபவிக்கிறார்கள்.
இப்படி இரண்டு பேருக்கு உணர்ச்சி ஏற்படுத்துவதற்காகக் கோவைக்கா வரலாம், இமயத்துக்கே போகலாம்.
தமிழ்ப் பண்பாட்டைத் தான் அனுபவித்து வியந்து பாராட்டுவதோடு மட்டுமல்ல. பிறர் அதை அனுபவிப்பதையும் பார்த்து அனுபவிக்கிறவர் ரசிகமணி..
ஆதாரம்– ரசிகமணி ரசித்த மணிகள் , மீ ப சோமு