அக்.03 காலை கொரோனாவால் காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ஆ. சச்சிதானந்தம் (83) பீக்காக் பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடத்தி வந்தார். அந்தப் பதிப்பகத்தின் மூலம் சி.சு. செல்லப்பாவின் பல நூல்களை வெளியிட்டார்.
மெளனியின் சிறுகதைகளைத் தொகுத்து அழியாச் சுடர்
என்ற தலைப்பில் முதன்முதலில் வெளியிட்டவர் அவரே. மெளனி பற்றித் தாமே ஒரு நூல் எழுதியுள்ளார். மெளனியுடன் நெருங்கிப் பழகியவர்.
இலக்கிய இதழ்கள் பலவற்றைச் சேகரித்து வைத்திருந்தார். நடை, இலக்கிய வட்டம்
ஆகிய சிற்றிதழ்களைத் தொகுத்திருக்கிறார். ஏராளமான புத்தகங்களும் அவரின் சேகரிப்பில் இருந்தன.
சிறுகதைகள் குறுநாவல்கள் எழுதிவந்தார். அவரது குறுநாவல் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது.
சிறந்த மொழிபெயர்ப்பாளர். சாமுவேல் பெக்கட் எழுதிய நோபல் பரிசுபெற்ற வெயிட்டிங் ·பார் கோடோ
என்ற புகழ்பெற்ற நாடகத்தைத் தமிழில் கோடோவிற்காகக் காத்திருத்தல்
என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். தாகூரின் சில படைப்புகளையும் மராட்டிய நாடகங்கள் சிலவற்றையும் மொழிபெயர்த்தவர்.
நிரம்பப் படித்தவர். உலக இலக்கியங்கள் குறித்து சுவாரஸ்யமாக உரையாடக் கூடியவர். எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் தோளில் ஒரு ஜோல்னாப் பையோடு வருகை புரிவார். சாகித்ய அகாதமி நடத்தும் கூட்டங்கள் எதையும் அவர் தவறவிட்டதில்லை.
சி.சு. செல்லப்பா வீட்டில் அவரை நிறையச் சந்தித்திருக்கிறேன். அமுதசுரபி இதழ்களிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பல்லாண்டு காலமாகத் தொடர்புடைய ஒரு நண்பரைக் கொரோனா எடுத்துச் சென்றுவிட்டது.
- திருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர், அமுதசுரபி)