சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து ‘இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா? போராட்டமா?’ எனும் தலைப்பில் காணொலிக் காட்சி மூலம் பட்டிமன்றம் நடத்தின. இப்பட்டிமன்றத்துக்கு சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் பட்டிமன்ற நிகழ்வினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரும், பட்டிமன்றப் பேச்சாளருமான முனைவர் பெரிய முருகன் அவர்களை நடுவராகக் கொண்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் பூந்தோட்டமே எனும் அணியில் முனைவர் ந. புனிதலெட்சுமி, முனைவர் பி. வித்யா, பழ. பாஸ்கரன் ஆகியோரும், போராட்டமே எனும் அணியில் முனைவர் மு. பழனியப்பன், ஜெ. முத்துக்குமரன், ரேகா மணி ஆகியோரும் பேசினர்.
முடிவில் நடுவர் இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது போராட்டமாக இருந்தாலும் அது பூந்தோட்டத்தை நோக்கியதாக இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்வுக்குச் சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா வரவேற்புரையும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா நன்றியுரையும் வழங்கினர்.