எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார்
எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார்
கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்
கம்பனொடு வால்மீகி வார்த்தையில் வந்தார் ! 01
சரயுநதி கரையினிலே தேவர்கள் வந்தார்
சனாதன கொடிகொண்டு ரிஷிமுனி வந்தார்
அரனோடு பிரம்மாவும் மனைவியர் சகிதம்
அயோத்தியில் “குழைந்தைராம்” காண வந்தார் ! 02
பத்தினிமார் மூவருடன் தசரதர் வந்தார்
பரதன்திவ்ய பாதுகைகள் சுமந்து வந்தார்
குத்தலகு ஜடாயுவும் குஹனும் வந்தார்
குரங்குகளின் படையோடு ஹனுமனும் வந்தார் !03
சேவை’பாவ’ இலக்குமணன் சத்ருகன் வந்தார்
சேய்ராணி சீதையுடன் ஜனகனும் வந்தார்
நாவில்ராம நாமம்செப்பி யாவரும் வந்தார்
நகரயோத்தி “கொழுந்துராமர்” பார்த்திட வந்தார் ! 04
வரதராஜர் கருடனேறி வான்வழி வந்தார்
அரங்கனெனும் குலதெய்வம் மேகத்தில் வந்தார்
குறைதீர்க்கும் திருமலையான் லட்டாய் வந்தார்
குழந்தைராமன் கொலுகாண அயோத்தி வந்தார் !05
அகலிகையும் சபரியுடன் சேர்ந்து வந்தார்
அங்கதனும் விபீஷனனும் அணைந்து வந்தார்
நகர்’அவத்’ ராமன்மேன்மை பெருமைகள் பேசி
திரிஜடையும் மண்டோதரியும் வியந்து வந்தார். ! 06
நெய்விளக்கு வாசல்வைத்தோம் ராமராம என்று
பொய்புதைந்து பிணிமடியும் ஐயோராமா யென்று
தைத்திங்கள் ராம்லல்லா கட்டியாள வந்தான்
கரசேவகர் ராம்ராஜ்யம் மலர்ந்திட்டது இன்று ! 07
தீதுகளை வால்சுருட்டி கலிவிரைவில் கொல்லும்
நாத்தீகம் படுகுழியில் தான்தானாய் செல்லும்
மேதினியில் பாரதத்தின் மேன்மைகளே வெல்லும்
மற்றதேசம் வணங்கும்வகை ராமராஜ்யம் நில்லும். 08
த்ரேதாயுக நிலைமீண்டும் கலியுகத்தே தோன்றும்
தீர்க்கமாம் நம்கண்டம் , வலிகண்டம் என்றும்;
மார்க்கமதாய் வழிகாட்டி “ராம்லல்லா” காக்கும்
மரியாதை புருஷனருள் “இழந்தவைகள்” மீட்கும் ! 09
இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்
எண்ணங்களில் ராம்ராம் ; செவிகளில் ராம்ராம்
மதங்கடந்து ராம்ராம்; மண்தோறும் ராம்ராம்
மகிழ்ச்சியொடு மங்கலங்கள் வெளி’நிறைக்கும் ராம்ராம் ! 10
கவிதை ஆக்கம்: கண்ணன் திருமலை ஐயங்கார்,
அஜனி.நாக்பூர். மஹாராஷ்டிரம்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 அடுக்குகளுடன் இந்த ஆலயம் அமைகிறது. 392 பிரமாண்டமான தூண்கள், 44 நுழைவாயில்களுடன் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் கீழ் தளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கு சுமார் 5 அடி உயரத்தில் ராமரின் சிலை அமைக்கப்படுகிறது. அயோத்தி ராமர் பிறந்து, வளர்ந்த இடம் என்பதால் அங்கு 5 வயதுடைய பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மைசூரை சேர்ந்த சிற்பி இந்த பால ராமர் சிலையை செதுக்கி உள்ளார். இந்த சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி 7 நாட்கள் பூர்வாங்க பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கின.
நேற்று பால ராமர் சிலையை அயோத்தி கோவிலுக்குள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நேற்று காலை சரயு நதியில் இருந்து புனித நீர் சேகரித்து ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதையடுத்து பால ராமர் போன்ற உருவம் கொண்ட வெள்ளியிலான ராமர் சிலை நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு மைசூர் சிற்பி செதுக்கி இருக்கும் பால ராமர் சிலை ஆலயத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சுமார் 200 கிலோ எடையுள்ள அந்த சிலை கிருஷ்ணா எனும் வகை கருங்கல்லால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கிரேன் மூலம் அந்த சிலையை ஆலயத்துக்குள் எடுத்து சென்றனர்.
இன்று (வியாழக்கிழமை) பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தும் பணிகள் நடந்தன. அதற்கு முன்னதாக கருவறையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புனித நீர் மூலம் கருவறை சுத்தப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பால ராமர் சிலைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று மதியம் அந்த சிலை கருவறை பீடத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து பால ராமர் சிலைக்கு அடுத்தடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து புண்ணிய நதிகளில் தீர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த புனித நீர்கள் மூலம் பால ராமர் சிலை சுத்தப்படுத்தப்பட உள்ளது. இன்றும், நாளையும் இந்த பணிகள் நடைபெறும்.
இதற்கிடையே அயோத்தி ஆலயம் அருகே பிரமாண்டமான பந்தலில் யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன. 1008 லிங்கங்கள் அமைத்து நடந்து வரும் பூஜைகளும் அயோத்தி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.