ஒரு காட்டில் கருத்துக் கொழுத்த ஆண்நரி ஒன்று இருந்தது. அது ஆண்டாண்டுக் காலமாகச் செய்துவந்த தவறு கண்டு பிடிக்கப்பட்டு அதன் வாலை அறுத்துவிட்டார்கள்.
அவமானப்பட்ட அந்த நரியால் ஓடவும் முடியவில்லை; ஒளியவும் முடியவில்லை. செய்வதறியாது திகைத்து நின்றது. அதன் நட்பு நரிகளும் கரடி, குரங்குகள், ஓநாய்கள், எருமைகள் எதுவும் அதன் உதவிக்கு வரவில்லை.
இந்நிலையில் மேலும் சில நரிகள் இதே போல தண்டனை பெற்று வாலறுந்து வந்தன. இது கண்ட ஆண்நரி “அடடா உய்ந்தோம்; இனி நான் தனியல்ல; தகவுடைய படை ஒன்று திரண்டு விட்டது” என்று குதித்துக் கும்மாளமிட்டது.
இவையனைத்தும் ஒன்று சேர்ந்து “ நரிகள் சுயமரியாதை சங்கம் “ தொடங்கியன. ”
”இதிலென்ன சுயமரியாதை ?” என்றவுடன் “ நாங்கள் யாருக்கும் வாலாட்ட மாட்டோம்” என்று மீடியாக்களில் பேட்டி கொடுத்தன.
இனி என்ன ?
நரிகளுக்குக் கொண்டாட்டம்; நமக்குத்தான் திண்டாட்டம்.
வனக்கதைச் சித்தர் வ.வே.சு.