‘வெள்ளை அறிக்கை எல்லாம் கிடையாது,
வெள்ளரிக்காய் வேண்டுமென்றால் தருவோம்’..
ஸ்டாலினுக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி!
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை கேட்ட ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி வெள்ளரிக்காய் தருவோம் என பதிலளித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர்.
அவர்களை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகளுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிஷியஸ் நாட்டிற்கும், அமைச்சர் நிலோபல் கஃபில் ரஷ்யாவிற்கும் சுற்றுப்பயணம் சென்றனர்.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘தமிழக அமைச்சரவை, சுற்றுலா அமைச்சரவையாக மாறியது’ என கேலி செய்தார். இந்நிலையில் தற்போது தமிழகம் திரும்பிய முதல்வரை, வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரினார் ஸ்டாலின்!
அதற்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, வழக்கமான கேலி கிண்டலுடன் பதிலளித்துள்ள போது, ஸ்டாலினுக்கு வெள்ளை, மஞ்சள், பச்சை அறிக்கையுடன் கூடவே வெள்ளரிக்காயையும் சேர்த்து தருகிறோம் எனக் கூறினார்.
இதனிடையே, வெள்ளை மனசுக்காரருக்கு வெள்ளையறிக்கை தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதற்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன், வெள்ளை மனதுக்கரராக இருந்தால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என பதிலளித்துள்ளார்.
இப்படி, இவருக்கு அவர், அவருக்கு இவர் என பதிலளித்துக் கொண்டு அரசியல் செய்து வருவது, தமிழக அரசியல் களத்தில் சற்று சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல்வர் மற்றும் அமைச்சரவை சகாக்களின் வெளிநாடு சுற்றுப் பயணங்கள் இப்போது தமிழகத்தின் ஹாட் டாபிக்!