சென்னை:
ஓ.பன்னீர் செல்வம் மீது தம்பிதுரை ஏன் அதிருப்தியில் கலகக் குரல் எழுப்புகிறார் என்ற பின்னணியை அதிமுகவினர் விவாதித்து வருகின்றனர். சசிகலா முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி இன்று அறிக்கை வெளியிட்டார் தம்பிதுரை. அதன்மூலம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
பன்னீர்செல்வத்துடனான பனிப்போரின் உச்சமாகவே இக்கோரிக்கையை தம்பிதுரை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவின் போது முதல்வர் பதவிக்கு தம்பிதுரை பெயரும் அடிபட்டது. ஆனால் மத்திய அரசு பன்னீர்செல்வத்தையே முன்னிறுத்தியது. இதனால் பன்னீர்செல்வம் முதல்வரானார். பன்னீர்செல்வம் முதல்வரானாலும் அவரைப் பின் தொடர்ந்தவராக தம்பிதுரை வலம் வந்தார்.
தில்லிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் சென்றபோது கூடவே இருந்தார் தம்பிதுரை. பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போதும் தம்பிதுரை உடனிருந்தார். ஆனால், ஓபிஎஸ் இச்சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு மோடியும் பன்னீர்செல்வமும் தனியே 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது சசிகலா தரப்பு தமக்கு தரும் நெருக்கடிகளை மோடியிடம் பன்னீர்செல்வம் விவரித்திருக்கிறார்.
மக்களவையில் துணை சபாநாயகராக இருக்கும் தம்மை வெளியே அனுப்பியதை தம்பிதுரையால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் ஓ பன்னீர்செல்வத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். தற்போது அமைச்சர்கள் சிலர் சசிகலாவே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தம்மை அவமதித்த பன்னீர்செல்வத்தை பழிவாங்கும் வகையில், தானும் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என பகிரங்க அறிக்கை வெளியிட்டுள்ளார் தம்பிதுரை. ஆளும் கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடம் இருக்கக் கூடாது என தம்பிதுரை கூறியுள்ளதன் மூலம் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்தியுள்ளதாகவே பேசப்படுகிறது.