தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக, டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிலும், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு திமுக., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது இந்த வழக்கு விசாரணையின் போது, டிச.13 ஆம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதை அடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலுக்கான இரு கட்ட தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுகிறது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் வடிவமைக்கப் பட்டு, தேர்தல் நடைபெறும்
வேட்புமனு தாக்கல் : டிச.6
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் : டிச.13
மனுக்கள் பரிசீலனை : டிச.16
மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் : டிச.18
முதல் கட்ட வாக்குப்பதிவு : டிச.27
2 ஆம் கட்ட வாக்குப்பதிவு : டிச.30
வாக்கு எண்ணிக்கை : ஜன. 2
தேர்தல் நடைமுறைகள் முடியும் நாள் : ஜன.4
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு : ஜன.6
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் : ஜன.,11
இதனிடையே, தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு டிச.5 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமியா அல்லது எடப்பாடி பழனிசாமியா என கேள்வி எழுப்பியுள்ளார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு உள்நோக்கமுடையது என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. இதுவரை உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இரு கட்டங்களாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது… என்றார்.
மேலும், தேர்தல் ஆணையர் பழனிசாமியா? எடப்பாடி பழனிசாமியா? என்ற கேள்வி எழுகிறது. அதிமுக.,வுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமென்ற நோக்கில்தான் திமுக, நீதிமன்றம் சென்றது. தமிழகத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் மட்டும் 2 கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பில் உள்நோக்கம் இருப்பதாகவே திமுக கருதுகிறது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும்… என்றார்.