தமிழக பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்? என்ற பரபரப்பான கேள்விகள் இப்போது பாஜக.,வினரிடையே எழுந்து வருகிறது.
பாஜக மேலிட அழைப்பின்பேரில் இன்று காலை தில்லி சென்றார் நயினார் நாகேந்திரன். இதனையடுத்து தமிழக பா.ஜ.க தலைவராக அவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
தமிழக பாஜக.,வுக்கு தலைவராக வெகுநாட்கள் இருந்துவிட்ட டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டார். இதன் பின்னர், தமிழக பாஜக.,வுக்கு தலைவர் நியமிக்கப் படாமலேயே இருந்தது. இந்த நிலையில், பாஜக.,வுக்கு தலைவராக வருவதற்கு சிலர் போட்டி போடுவதாகவும், மேலிடம் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் பகிரப் பட்டன.
தற்போது ஒருபகுதி உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக.,வுக்கு தலைவரை நியமித்தாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக., மேலிடம் இருப்பதால், மேலிடத்தின் பார்வை தமிழகத்தில் பதிந்துள்ளது.
கடந்த வாரம் கட்சி செயல் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்திருந்தார். அப்போதும் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டுள்ளார். ஏற்கெனவே தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் என இரு தரப்பு மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறப் பட்டது. அதே நேரம் கட்சியை பாஜக.,வின் அதிமுக பிரிவு, பாஜக.,வின் திமுக., பிரிவு என இரு திராவிட கட்சிகளின் சார்பு இல்லாமல், தேசிய பாஜக.,வை தமிழகத்தில் துடிப்புடன் வளர்ப்பார் என்று ஹெச்.ராஜாவை சிலர் முன்னிறுத்தினர்.
கட்சிக்குப் புதியவர் என்று கூறப் பட்டு வந்த நயினார் நாகேந்திரனை சிலர் முன்னிறுத்தினர். ஆனால் அவருக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. ஏற்கெனவே திருநாவுக்கரசரை நம்பி கட்சியை ஒப்படைத்து, அதனால் கட்சி பெருமளவு பாதிக்கப் பட்டதும், திராவிட பாணி அரசியல் பாஜக.,வில் தலைதூக்கியதும் மூத்த நிர்வாகிகளால் நினைவுகூரப் பட்டு வருகிறது.
அது போல், அதிமுக., அணியில் இருந்து பாஜக.,விற்கு வந்த நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் குழு ஒருபுறம் பாஜக.,வில் மீண்டும் அதே போன்றதொரு அதிமுக., பாணி அரசியலை பாஜக.,வில் முன்னிறுத்தக் கூடும் என்று கருதப் படுவதால், நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு இல்லை என்று கருதப் பட்டது.
இந்த நிலையில், தற்போது அவர் கட்சி மேலிடத்தால் அழைக்கப் பட்டுள்ளார் என்றும், இன்று தில்லியில் மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேசும் அவரே பின்னர் மாநிலத் தலைவராக அறிவிக்கப் படக் கூடும் என்றும் பாஜக.,வில் செய்தி பகிரப் பட்டு வருகிறது.