பெண்குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்யும் கொடுமை இன்னமும் தொடர்வதாக பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். மதுரை பகுதியில் அண்மையில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையை கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்த கொடுமையான செய்தி வெளியானநிலையில், தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தருமபுரி பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இது போல் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுவது குறித்த செய்திகள் பொதுத் தளங்களில் வெளியாகி, அரசு இதற்காக தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்டவற்றைக்கொண்டு வந்தது. மத்திய அரசும் பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி நடமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒரு பெண் சிசுக் கொலை அரங்கேறியுள்ளது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அருகே, வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி வீட்டின் அருகிலேயே அக்குழந்தை புதைக்கப் பட்டிருக்கிறது. குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தினர். இதில் பிறந்து 31 நாளே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்றது அம்பலமானது.
இதனை அடுத்து வைரமுருகன்-சௌமியா மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு அதிர்ச்சி தெரிவிக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில்…
பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது. மதுரை மாவட்டம் புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது. கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர்-துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண்சிசுக்களை பாதுகாக்க வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார்.