வறுமையினால் வாய் திறந்து பேசினேன், மேடையில் பேச எனக்கு ரூ. 500 கொடுத்தார்கள், அதனால் அவ்வாறு பேசிவிட்டேன் என் பேச்சையெல்லாம் ஒருபொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அழுது புலம்பியிருக்கிறார் பஞ்ச் பாலமுருகன்.
குடியுரிமை திருத்தச் சட்டம், சிஏஏ என்பிஆர் என் ஆர் சி ஆகியவற்றுக்கு எதிராக வரிசையாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றன இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத தொடர்புடைய இந்திய இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு மேற்கொண்டு வரும் இந்தப் போராட்டங்கள் அனைத்தும் இஸ்லாமியர்களால் மட்டுமே நடத்தப் படுகின்றன என்பது வெளி உலகுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, இந்துக்கள் சிலரையும் அழைத்து தங்கள் மேடைகளில் பேச வைக்கின்றன.
அதற்காக மத்திய மாநில அரசுகளை அரசியல் ரீதியாக எதிர்த்துப் பேசும் நெல்லை கண்ணன் போன்ற பேச்சாளர்களை பயன்படுத்திக் கொள்கின்றன. அந்தப் பட்டியலில் இடம்பெற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஊர்
ஊராகச் சென்று மேடைகளில் வாய்கிழியப் பேசிய போராளி ஒருவர், இப்போது ஒரு கூட்டத்துக்கு 500 ரூபாய் தந்தார்கள், வயிற்றுப் பிழைப்புக்காக ஆவேசத்துடன் பேசினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் ஐயா வழி பஞ்ச் பாலமுருகன்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொண்டு, மைக் பிடித்து, மத்திய மாநில அரசுகளையும், பாஜக., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளையும் வாய்க்கு வந்தபடி பேசியவர் நெல்லையைச் சேர்ந்த பேச்சாளர் ஐயா வழி பாலமுருகன்..!
இவர் தற்போது மேடைகளில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகப் பேசுவதுடன், அதற்காக குடியரசு தலைவர், பிரதமர், இந்து அமைப்புகள், பார்ப்பனர்கள், பிற சாதியினர் ஆகியோரை வாய்க்கு வந்தபடி ஒருமையிலும் அவமரியாதையாகவும் பேசியபடி இருந்தார். அவற்றை இந்தக் கூட்டங்களில் கூடும் இசுலாமியர்கள் கைதட்டி ரசித்து ஆரவாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் பாலமுருகன் கோயம்புத்தூரில் பேசிய கருத்து தொடர்பான விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவருக்கு உண்மை நிலையைப் புரியவைத்து, அறிவுரைகள் கூறியுள்ளனர்.
இதை அடுத்து தாம் வயிற்றுப்பிழைப்புக்காக கூட்டத்துக்கு வெறும் ரூ.500 வாங்கிக் கொண்டு அவ்வாறு பேசியதாகவும், தாம் பேசியவற்றைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், இனி அவ்வாறு பேசமாட்டேன் என்றும் வீடியோ பதிவிட்டு வெளியிட்டிருக்கிறார்.
தமது வறுமை காரணமாக ரூ. 500க்கும் மேலும் வரும் பஞ்சாயத்து தேர்தல்களில் பலன் கிடைக்கும் என்பதாலும் அவ்வாறு பேசியதாக அவர் கூறுகின்றார். ஆனால், ரூ.500 வறுமையைப் போக்கிவிடுமா என்று கேள்வி எழுப்பும் சிலர், தேர்தல் கால பலனை எண்ணியே அவர் அவ்வாறு பேசுவதாகக் கூறுகின்றனர்.
மேலும், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எவரையும் கூப்பிட்டு ‘அறிவுரை’ கொடுக்க இயலாத நிலையில், பாலமுருகன் போன்றவர்களை அழைத்து போலீஸார் நல்லது சொல்லி அனுப்புகின்றனர் என்று கூறுகின்றனர்!