சென்னை:
கவிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் காலமானார்.
1937ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய நெல்லை மாவட்டம் தமிழூர் ச.வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை உள்ளிட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார். தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகள் பெற்றவர். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி வடிவ கவிதைகளை தமிழில் பெயர்த்தவர். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர், சென்னை பல்கலை தமிழ்த் துறை தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர் இவர்.