தமிழகத்திலேயே, தலைநகர் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
குறிப்பாக, சென்னையிலும் வடசென்னைப் பகுதியில் தான் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில், வடசென்னைப் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு, மக்கள் நெருக்கம் தான் காரணம் என்று மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரிக்குக் கீழ் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கிழக்கு மண்டலத்திற்கு ஆபாஷ்குமார், தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் பூஜாரி, மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங் ஆகியோரும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். டிஐஜி புவனேஷ்வரி புறநகர் பகுதிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்.