கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்று தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு சமயத்தில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து குறிப்பிட்டுள்ள முதல்வர், மக்களின் ஒத்துழைப்பை முக்கியத்துவமாக கூறியுள்ளார். மேலும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் சமயத்தில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியான நபர்களில் 86 விழுக்காடு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எந்த விதமான அறிகுறி இல்லாமலும் கொரோனா ஏற்பட்டுள்ளது என்றும், உயிரிழப்போரின் விழுக்காடு உலகிலேயே தமிழகத்தில் தான் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இந்த தொற்றை பேரிடராக அறிவித்து நேற்று வரை 4 ஆயிரத்து 333 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. முதல்வரின் பொது நிதிக்கு நேற்று முன்தினம் வரை ரூ.378 கோடியே 96 இலட்சத்து 7 ஆயிரத்து 354 பெறப்பட்டுள்ளது.
தற்போது வரை புதியதாக 530 மருத்துவர்கள் மற்றும் 2,323 செவிலியர்கள், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அரசின் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றும் பட்சத்திலேயே கொரோனாவை கட்டுக்குள் வைக்க இயலும் என்று தெரிவித்துள்ளனர்.