சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று காலை முதியவர் ஒருவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். அவரின் உடலில் எந்தவித அசைவும் இல்லை எனப் பெரியமேடு காவல் நிலையத்துக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், யாரும் அங்கு வரவில்லை. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முதியவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதனால் அநாதையாக முதியவரின் சடலம் பிளாட்பாரத்திலேயே சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
முன்னதாக தனியார் தொண்டு நிறுவனத் தன்னார்வலர்கள் அங்கு வந்தனர். அவர்களும் முதியவரை மீட்டுக் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர். ஆனால் முதியவர் இறந்ததால் அவரின் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆனால் போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு வரவில்லை. சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸும் வராதால் தனியார் தன்னார்வலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே காத்திருந்தனர். கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களும் முதியவரின் சடலம் அருகே வரவில்லை.
இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், “உயிரிழந்த முதியவர் யாரென்று தெரியவில்லை. அவர் உடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக பிளாட்பாரத்தில் படுத்திருந்துள்ளார். ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் சோர்வாகக் காணப்பட்டதாக அந்தப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
சில நாள்களுக்கு முன்தான் இந்த பிளாட்பாரத்தில் தங்கியிருந்துள்ளார். அவர் இறந்தபிறகு சடலத்தை எடுத்துச் செல்வதில்கூட சிக்கல் நீடித்தது. எனவே, சாலைகளில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முதியவர் இறந்து கிடந்த இடம், ரிப்பன் மாளிகை அருகில்தான் உள்ளது. அப்படியிருந்தும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக அங்கு செல்லாததற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை என்கின்றனர் தன்னார்வலர்கள்.
தன்னார்வலர்கள் எடுத்த முயற்சி காரணமாக முதியவரின் சடலம் அரசு மருத்துவமனை பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.