சென்னை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் வசித்து வந்தவர் ஆதிகேசவன். 74 வயதான இவர் அண்மையில் தனது 103 வயதான தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். அடுத்த மூன்று நாட்களில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மொபைல் உபயோகிக்காத ஆதிகேசவன் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பதை அவர் மகனாலும், உறவினர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவரது மகன் மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு தனது வயதான தந்தையை பார்ப்பதற்காக ஆலந்தூர் மருத்துவமனைக்கு மகன் சென்றுள்ளார்.
ஆனால் அங்கே முதியவர் யாரும் அப்படி அனுமதிக்கப் படவில்லை என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சென்று கேட்டதற்கு, ஒருவேளை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கலாம். கொரோனா நோயாளிகள் அங்குதான் அனுமதிக்கப் படுகிறார்கள் என்று கூற, அங்கே சென்று விசாரித்தபோது அப்படி யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
இதை அடுத்து, ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி அலைந்த ஆதிகேசவன் மகன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறை அதிகாரிகளோ, அவரது புகாரை ஏற்றுக் கொள்ளாமல் அலைக்கழித்துள்ளனர். இதை அடுத்து நீதிமன்றத்தில் ஆதிகேசவன் மகன் சார்பில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டது.
இதை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக ஆதிகேசவன் அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் பிடிபட, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு முதற்கட்டமாக கூட்டிச் சென்று பின் அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் இறக்கி விட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை இறக்கி விட்டுச் சென்றதும், அதன் பிறகு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரை யாரும் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டதும் தெரியவந்தது.
8 மணி நேரமாக அங்குமிங்குமாய் சுற்றிக் கொண்டிருந்த முதியவர் திடீரென மாயமாகியுள்ளார். எனவே அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தான் மாயமாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆன நிலையில், கொரோனாவால் அழைத்துச் செல்லப்பட்ட ஆதிகேசவன் மீண்டு வந்துவிடுவார் என்று அவரது குடும்பம் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனா நோயாளி மாயமாகும் அளவுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர், சுகாதாரத் துறையினரின் அலட்சியமாக இருந்து கொண்டுள்ளது, தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிகேசவன் என்ற பெயர் இருந்ததால் தான் இப்படி அலட்சியம் நடந்திருக்கிறது என்று அங்கலாய்க்கின்றனர் பொதுமக்கள்!