மதுரையில் இரும்பு லோடு ஏற்றி வரும் லாரியின் எடையை குறைக்க எடை மேடை உரிமையாளருக்கு தெரியாமலே சிப் வைத்து மோசடியில் ஈடுப்பட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலையில் யோகி என்பவர் எடை மேடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி தனது லாரி எடை மேடையின் உள்புறத்தில் பச்சை நிறத்தில் வெளிச்சம் வருவதைக் கண்ட யோகி உள்ளே சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் எடை இயந்திரத்தில் சிப் ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைதொடர்ந்து இந்த கருவியை யார் பொருத்தியது என்பதை கண்டுபிடிப்பதற்காக சிசிடிவியை ஆய்வு செய்தபோது, கடந்த 5ஆம் தேதி நள்ளிரவில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் லாரி எடை மேடை கீழ்ப்புறத்தில் சென்று சிப்பை பெருத்தியது தெரிய வந்தது.
இந்த நிலையில், லாரி மேடையில் பொருத்தப்பட்டுள்ள சிப் சரியாக உள்ளதா என பார்ப்பதற்காக அந்த மோசடி கும்பலை சேர்ந்த 3 பேர் வந்தபோது, அவர்களை கண்ட யோகியும், அவருடைய நண்பர்களும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து அங்கேயே கட்டிப்போட்டனர்.
பின்னர் அவர்களை சிலைமான் காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இதில் தொடர்புடைய எடை மேடை காவலாளி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் செய்துதாகரபீக், அபுபக்கர், மைதின் பாட்சா, சம்சுதீன், கமால் பாட்சா, சுப்பையா என்பதும், லாரியில் ஏற்றி வரும் பொருட்களின் எடையை குறைத்து அதிக லாபம் ஈட்ட நினைத்து மோசடியில் ஈடுப்பட்டதும் தெரிய வந்தது.