சென்னை:
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அத்துடன் இந்தத் தீர்ப்பு இன்னும் 15 வருடங்களுக்கு அமலில் இருக்கும். இதை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்று கூறி விட்டது. இருப்பினும் தமிழக அரசு, தமிழகத்துக்குப் பாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான திமுக., காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அடுத்து என்ன விதமான நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிப்பதாகக் கூறியது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, அதிமுக, பாஜக., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருப்பதாகக் கூறினார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல, நேற்று கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்த, இன்னும் கட்சியே துவங்காத கமல்ஹாசனைக் கூட இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை அடுத்து, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் முடிவில் காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.,23ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.
இதனிடையே, ஆளும் கட்சியான அதிமுக,.வையும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதால், இதை தன் மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு, ஆளும் கட்சி தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் என்ன என்று அதிமுக.,வுக்கு தோன்றியுள்ளது. ஆனால், அரசின் சார்பில் இதனை நடத்தலாம் என்று யோசித்து, வரும் 22ஆம் தேதியன்று முதல்வர் தலைமையில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று முற்பகல், காவிரி விவகாரம் தொடர்பாக, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட ஆலோசனையின் முடிவில், பிப்.22ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது. ஏற்கெனவே, பிப்.23ல்
தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் திடீர் ஆலோசனை நடத்தி, அதற்கு ஒரு நாள் முன்னதாக, தங்கள் தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார்.