மதுரை:
கட்சியின் கொள்கை என்ன என்று கமலுக்காவது தெரிந்ததே .. என்பதுதான் பலரின் ஆச்சரியமாக இருந்தது. இன்று கமல்ஹாசன் தனது கட்சிக் கொடியை அறிமுகப் படுத்தி, கட்சியின் பெயரை அறிவித்து பேசிய போது பலருக்கும் அதுதான் தோன்றியது.
முன்னர் நடிகர் ரஜினி காந்த், தான் அரசியலில் குதிப்பது உறுதி என்று கூறி ரசிகர்கள் மத்தியில் பேசியபோது, யாரோ ஒரு பத்திரிகையாளர் திடீரென்று மைக்கை நீட்டி, ஐயா உங்க கொள்கை என்ன என்று கேட்டதாகவும், என்னாது கொள்கையா என்று ரஜினி ஆச்சரியப் பட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில், தனக்கு கொள்கைகள் உண்டு என்று காட்டும் விதமாக, நடிகர் கமல்ஹாசன், கட்சியைத் துவங்கி வைத்து பேசியபோது தெரிவித்தவை…
எல்லா நல்ல முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைகள்தான் மக்கள் நீதி மய்யத்திற்கும் இருக்கிறது. தரமான கல்வி, எல்லா தரப்பினருக்கும் போய் சேர வேண்டும்.
நல்ல தலைமை, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் சொல்லிச் சொல்லி விளையாடும் விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நின்று காட்டுவோம்.
ஊழலை குறைப்பதில் நமக்கும் பங்கு உள்ளது. இதுநாள் வரை வேடிக்கை பார்த்தோம். இனி அதை செய்யக்கூடாது.
உங்கள் வாக்கின் மதிப்பு தெரியாமல் விற்று விட்டீர்கள். உங்களின் எல்லா பற்றாக்குறையும் பேராசையால் வந்துள்ளது. நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தால், ஆறாயிரம் என்ன, வருடத்திற்கு 6 லட்சம்கூட கிடைத்திருக்கலாம்.
காவிரியில் தண்ணீர் வாங்கி கொடுக்க முடியுமா என்கிறார்கள். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல, என்னால் ரத்தத்தைக் கூட வாங்கி கொடுக்க முடியும். நான் ரத்த தானத்தை சொல்கிறேன். என் பெங்களூர் சகோதரர்கள் தமிழ்நாட்டில் வந்து ரத்ததானம் செய்து இருக்கிறார்கள். அதனால் எதையும் பேசித் தீர்க்க முடியும்.
நாங்கள் 8 கிராமங்களை தத்தெடுப்பதை கிண்டல் செய்கிறார்கள். உடனே செய்வதற்கு நாங்கள் விஞ்ஞானிகள் அல்ல, சமூக சேவகர்கள். அந்த கிராமங்களில் அனைத்து வசதிகளையும் செய்வோம். தவறுகள் இருந்தால் திருத்துவோம்.
நம் கட்சி கொடியில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களை குறிக்கும். மக்களையும் நீதியையும் மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. – என்று பேசினார்.