குற்றால பேரருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பெண்கள் வரிசையில் நின்று குளிக்க அனுமதி அளித்து அசத்தும் போலீசார்க்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
குற்றாலத்தில் தற்போது 2 வது கட்டமாக சீசன் களை கட்டியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். அருவிகள் நகரமாக இருக்கும் குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக குற்றாலம், தென்காசி மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சிலு…சிலு ..சூழல் நிலவி வருகிறது. மேலும் சாரல் காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
பேரருவியில் ஆர்ப்பரிப்போடு கொட்டும் நீரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் பேரருவியில் பெண்கள் பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி எந்த ஆண்டுகளும் இல்லாத அளவு இந்தாண்டு காவல்துறையினர் பெண் சுற்றுலாப் பயணிகளை நீண்ட வரிசையில் நின்று குளிப்பதற்கு அனுமதித்து வருகின்றனர்.
இதனால் பெண்கள் அதிகநேரம் கூட்ட நெரிசலின்றி குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் தற்போது அதிகளவு காணப்படுகிறது.