கோவை:கோவையை உலுக்கியது அதிர்ச்சிகரமான ஒரு விபத்து. அதிவேகமாக வந்த சொகுசு கார் மோடி, சாலையோரம் நின்றிருந்த 7 பேர் உயிரிழந்தனர்.
கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி உரிமையாளர் மதன் பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி ஆடி காரில் வந்து கொண்டிருந்தார். காரை ஓட்டுனர் ஜெகதீஷ் என்பவர் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஆடி கார் திடீரென இடதுபுறமாக அதிவேகத்தில் திரும்பியது. திரும்பிய வேகத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதிய கார், ஆட்டோவை சில அடி தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளது. பின் ஐயர் மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது.
திடீரென கார் வேகமாக வந்து மோதியதில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த 9 பேர் தூக்கி வீசப் பட்டனர். பின் அதையும் கடந்து அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது அந்த ஆடி கார். இதில், மின் கம்பம் சரிந்து, மின் விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது. கம்பிகள் அறுந்து தொங்கியுள்ளன.
கார் மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்தியே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேரைச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்ற போது அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோரை அடையாளம் காணும் பணிகளை போலீஸார் மேற்கொண்டனர். இந்த விபத்தால் கோவை மாநகரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அந்தப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் குவிந்தனர்.
உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆட்டோ, ஆடி கார் இவற்றை போலீஸார் அப்புறப்படுத்தினர்.