சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்ற வாகனத்தை முந்திச் சென்று, அமைதியைக் குலைத்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சென்ற இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றிரவு பாதுகாப்பு வாகனங்கள் சூழ சென்னை கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலை வழியே, ஆளுநர் மாளிகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழக்கம் போல் அந்தப் பகுதிகளில் போக்குவரத்தை நிறுத்தியிருந்தனர் போலீஸார். ஆனால் நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 7 பேர் திடீரென போலீசாரின் தடுப்பையும் மீறிக் கொண்டு, சாலையில் குறுக்கே பாய்ந்தனர். தொடர்ந்து, ஆளுநரின் கார்கள் அணி வகுப்பை அதிவேகத்தில் முந்திச் செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த, உடன் வந்த பாதுகாவலர்கள் விரைந்து செயல்பட்டு நான்கு இரு சக்கர வாகனங்களையும் சுற்றி வளைத்துப் பிடித்னர்.
பின்னர், 7 பேரும் வாகனங்களுடன் அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தினேஷ், நவீன், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மரிய அந்தோணி, ஹரி பிரசாத், தனியார் நிறுவன ஊழியர்கள் அருண், கணேஷ், லோகேஷ் என தெரிய வந்தது.
இந்த 7 பேர் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. தொடர்ந்து, அவர்களின் வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.