சென்னை: முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.
சர்கார் படத்தில் அரசின் விலையில்லாப் பொருள்களை எரிப்பது போல் காட்சிகள் இருப்பது, மக்களை வன்முறைக்குத் தூண்டுவது போல் அமைந்திருப்பதாக அதிமுக., அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், ஜெயலலிதா பெயரை தவறான பாத்திரத்துக்கு வைத்து வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சீண்டியுள்ளதாக அதிமுக.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, பல இடங்களில் அதிமுக.,வினர் கொடுத்த புகார்கள் போலீசில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்பட்டது. நள்ளிரவில் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் விரைவதாகவும் செய்திகள் பரவின.
அனுமதியின்றி பேனர்கள் வைப்பது தொடங்கி, படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகள் வரையில் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது சர்கார். படம் வெளிவரும் முன்பேயே, பர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி அமைந்த வகையில் போஸ்டர் வெளியாகியிருந்தது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. உடனே, அந்தக் காட்சி நீக்கப்படும் என்று சர்கார் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
படம் வெளியான பின்னர், பல்வேறு சர்ந்சைகள் தொடர்வதால், தாம் கைதாவதில் இருந்து தப்பிக்க, சர்க்கார் இயக்குனர் ஏ ஆர். முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.