செங்கோட்டை: திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, தற்போது நிலம் கையகப் படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக திருமங்கலம் முதல் புளியரை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.
கேரளம், நெல்லை பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் எளிதில் இந்த நான்கு வழிச் சாலை வழியாக மதுரை மற்றும் இதர பகுதிகளுக்குச் செல்ல முடியும். தமிழகத்திலிருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற வண்ணம் உள்ளன. சபரிமலை ஸீஸன் காலங்களில் வாகன எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குற்றாலத்தில் ஸீஸன் காலங்களிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும்.
மேலும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாகத்தான் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழியே மதுரைக்குச் செல்ல சுமார் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் ஆவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சோர்வு அடைந்து விடுகின்றனர்.
இந்நிலையில் தற்போது திருமங்கலம் முதல் கொல்லம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக முதல் கட்டமாக திருமங்கலம் முதல் நெல்லை மாவட்டம் புளியரை வரை நிலங்களை கையாகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
செங்கோட்டையிலிருந்து புளியரை செல்லும் வழியில் உள்ள இசக்கியம்மன் கோவில் ஓடை அருகே ரவுண்டானா அமைகிறது. அந்த இடத்தில் நான்கு வழிச்சாலை தொடங்குகிறது. இந்தச் சாலையில் தான் நெல்லை-கொல்லம் சாலையும் இணைகிறது. இந்தப் பகுதியில் உள்ள தனியார் நிலங்களில் சாட்டிலைட் மூலம் நிலம் தேர்வு செய்யப் பட்டது. இந்தப் பகுதிகளில் பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் குழுவினர் தனியார் விளை நிலங்களில் சுமார் 60 மீட்டர் நீளத்துக்கு கற்களை நட்டு அடையாளம் இடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.