“தெளிவுப் பாதையின் நீச தூரம்” என்கின்ற திரைப்படம் திரைப்பட தணிக்கை துறை, மாநில தணிக்கை துறை, மத்திய தணிக்கை துறை இரண்டு துறையினராலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் இந்தத் திரைப்படத்தை சென்னையில் கோடம்பாக்கம் எம் எம் ஸ்டுடியோவில் பொதுமக்கள் பார்வைக்காக திரையிடுவதாக ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது கோவை கலவரத்தை மையப்படுத்தியும் , இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் குறித்தும் இந்து இயக்கங்கள் குறித்தும் அவதூறு கற்பிக்கும் வகையில், மீண்டும் மதக் கலவரம் உண்டாக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் உள்நோக்கத்துடன் திரையிட முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரி இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம், இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்க பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் ராம. ரவிக்குமார் தெரிவித்த போது,
தெளிவுப் பாதையின் நீச தூரம் என்கின்ற ஒரு திரைப்படத்தின் உடைய வெளியீடு குறித்து யூ டியூப்பில் கண்டேன். இந்த திரைப்படம் தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் அருண் என்பவராலும் அரவிந்த் என்பவரால் இயக்கப்பட்டு இருக்கிறது.
கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பந்தமான கதையம்சம் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது இதில் வரக்கூடிய வசனத்தை நான் தங்கள் பார்வைக்கு எழுத்து வடிவில் சமர்ப்பிக்கிறேன். “ஒரு சம்பவத்தோடு கிரவுண்டை எக்ஸாமின் பண்ணாம மேலோட்டமா பாக்குறது இல்ல எனக்கு உடன்பாடு இல்லை ”
“அது எப்படி பாய் கடைன்னு கரெக்டா தெரிஞ்சது” “இந்தப் பிரச்சினையில் எங்க இருந்து வந்தாங்க இந்த இந்துத்வஅமைப்புகள் ” இது இந்து நாடு உடல் பொருள் ஆவி எல்லாம் நாட்டுக்கு சமர்ப்பிப்போம் இது நம்ம சொந்த நாடு வந்தேறிகளை வளரவிடக்கூடாது என்று சொல்லி ஏத்தி விட்டா யார் என்றாலும் மண்டைய உடைக்கலாம் சார்”
“பாபர் மசூதி இடிச்சப்பஇருந்தே பிரச்சனை அதிகமாயிடுச்சு” “யாரோ குண்டு போட்டதுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையே குற்றவாளி ஆகிட்டாங்க”
“அவருடைய பேண்ட் அகலத்தை பார்த்துட்டு முஸ்லிம்னு தெரிஞ்ச பிறகு தான் சுட்டுக் கொன்றார்கள் ” ” கலவரத்தில் செத்துப் போனவங்க எல்லாம் யார் சொன்னாங்க எத்தனை கண்விக்ட் , எத்தனை பேருக்கு தண்டனை ஆகி இருக்குன்னு கொஞ்சம் தேடிப் பாருங்க ஆனால் குண்டு வெடிப்பு மட்டும் சட்டம் தன் கடமையை கண்ணியமாக செஞ்சுடுச்சு”
“ராமகோபாலன் தொண்ணூறுகளில் கோயம்புத்தூரில் நடந்த மீட்டிங்ல
இந்துக்கள் கடைகளில் மட்டும் தான் பொருள் வாங்கனும், முஸ்லிம் கடையில பொருள் வாங்க கூடாதுன்னு வெளிப்படையாகவே பேசினார் ”
“அட்ரஸ் இல்லாத கட்சி காரங்க எல்லாம் இந்த கொலையை வச்சு வாழு வாழுன்னு வாழுறாங்க” “அவங்க வளர்வதற்கு எங்க முட்டாள்தனத்தை ஆயுதமா பயன்படுத்திட்டாங்க” “இதற்கெல்லாம் ஆதாரம்? இப்பத்தான் conspiracy theory வெளியில வருது இனிமேதான் ஆதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் ”
” எல்லா ஆதாரத்தையும் வச்சுகிட்டு எங்ககிட்ட ஒண்ணுமே இல்லைன்னு சொல்ல நாம் என்ன கவர்ன்மெண்டா” பிளடி religions எங்கிருந்து வந்தது மதங்களெல்லாம் எல்லாம் மயிர்ல இருந்துதான் .. வாட் ” என்பதாக வசனங்கள் அமைந்திருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை குழு அனுமதி வழங்கவில்லை .
தடை விதித்திருக்கிறது. உடனே இந்தத் தடை என்பது திரைப்பட கலைஞர்களுக்கு விதிக்கக் கூடாது, மக்கள் தீர்மானிக்கட்டும் என்று வரக்கூடிய 9 12 2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கோடம்பாக்கம் எம் எம் திரையரங்கில் மாலை 6 மணிக்கு திரையிடப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கோவை குண்டுவெடிப்பு – கலவரம் நடந்து முடிந்து ஆண்டுகள் பல ஆன பின்னர் மீண்டும் அமைதியாக இருக்கக் கூடிய தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு திரைப்படத் தணிக்கை துறையின் தடையை மீறி , அனுமதியின்றி திரையிட கூடிய இந்த திரைப்படத்தை திரை விடாத வண்ணம் சட்ட நடவடிக்கை எடுத்திடவும் , இந்தத் திரைப்படக் குழுவினர் பின்னணியில் இருக்கக்கூடிய திராவிட இயக்கத் அவர்களையும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினரையும் யார் என அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் பொது அமைதியை பாதுகாத்திட தமிழக காவல் துறையையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.
இதனிடையே, தமிழ் ஸ்டூடியோ அருண் எழுதிய பதிவில், மக்கள் பார்க்கும் உரிமை மறுக்கப்பட்ட புதிய திரைப்படம் “தெளிவுப்பாதையின் நீச தூரம்” திரையிடல்! 09.12.2018, ஞாயிறு மாலை 6 மணிக்கு.
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக படைப்பாளிகள் பக்கம் உள்ள நியாயங்களை, அவர்களது படைப்புகள் மக்களை சென்று சேர வேண்டிய அவசியத்தை பேசி வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத அதிகார போதை இந்தியாவில் உள்ள தணிக்கை துறைக்கு மட்டும் இருக்கிறது. ஒரு படைப்பாளியின் படத்தை குறிப்பிட்ட காட்சிகளை நீக்க சொல்லவோ, அல்லது படத்தை திரையிடவே சான்று அளிக்க முடியாது என்று சொல்லக்கூடிய அதிகாரம் தணிக்கை அமைப்பிற்கு இல்லை. ஆனால் இந்திய தணிக்கை துறை தொடர்ச்சியாக இப்படியான குறுக்கீடுகளை படைப்பாளிகளிடம் நிகழ்த்தி வருகிறது. தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் இதனை தொடர்ச்சியாக கண்டித்து வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட நண்பர் அரவிந்த் இயக்கிய தெளிவிப்பாதையின் நீச தூரம் திரைப்படத்திற்கும் இவ்வாறு தணிக்கை பிரச்னை நேர்ந்திருக்கிறது. ஆனாலும் ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய படைப்பாளி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பிருக்கிறது. அதில் தமிழ் ஸ்டுடியோ போன்ற சமூக திரைப்பட இயக்கங்களும் பங்கு கொள்ள வேண்டும்.
இந்த திரைப்படம் எப்படியான படம், நல்ல படமா? அரசியல் படமா? விவாதத்திற்குரிய படமான என்பதெல்லாம் படம் பார்த்தபிறகு பார்வையாளர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. பார்வையாளர்களை சென்று சேராமலேயே இது சார்ந்து கருத்துக்களை முன்வைக்க இயலாது. முதலில் படத்தை பார்வையாளர்கள் பார்க்கட்டும் என்கிற அடிப்படையிலும், படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு தமிழ் ஸ்டுடியோ எப்போதும் துணை நிற்க வேண்டும் என்கிற நோக்கத்திலும் இதனை திரையிடுகிறோம். அவசியம் வந்து பாருங்கள். படைப்பாளிகளுக்கு துணையாய் இருங்கள். திரண்டு வாருங்கள், உங்கள் வருகையை படைப்பாளிக்கு உரிய உத்வேகத்தை கொடுக்கும்….என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவையும் இணைத்து புகார் மனு கொடுக்கப் பட்டுள்ளது.