பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி 181 ஐ ஒரே நாளில் அம்பத்தூரில் 4000 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு நடக்கும் தொல்லைகளை எங்கு சொல்வது என்று தெரியாமல் இருக்கும் பெண்களுக்காக தமிழகத்தில் 181 சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.
இதற்காக சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நேற்று காலை தொடங்கி வைத்து உள்ளார். இதனை அடுத்து இந்த மையம் நேற்று முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 ஆயிரம் பெண்கள் இந்த சேவையை தொடர்பு கொண்டு தங்களின் புகார்களை தெரிவித்தனர். மேலும் இதில் உடனடி தீர்வு மற்றும் உடனடி அல்லாத தீர்வு காண்பது குறித்து இரண்டு தரப்புகள் உள்ளது.
உடனடி தீர்வு என்பது அவர்களின் புகார்களுக்கு ஏற்ப உடனே நடவடிக்கைகள் எடுப்பது உடனடி தீர்வு அல்லாதது என்பது சம்பந்தப்பட்ட புகார்தாரர்களை அழைத்து கவுன்சிலிங் கொடுப்பது என உள்ளது. இந்த சேவை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.