தூத்துக்குடி பெண் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வழக்கில் பெண்ணின் கணவர் கைது செய்யப் பட்டுளார். சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் கை, கால்கள் கிடந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் ஒரு பெண்ணின் கை, கால்கள் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட வழக்கில் மர்மம் விலகியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த மனைவியை சமரசம் பேச அழைத்து கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை வீசி எறிந்த சினிமா இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டன. பெண்ணின் கையில் டாட்டூ வரையப் பட்டிருந்ததால், அதை வைத்து பெண்ணின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார் என்றும் தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பள்ளிக்கரணை போலீசார், உடல் வந்த லாரி குறித்து விசாரணை நடத்தியதினார்கள். அது கோடம்பாக்கம் பவர் ஹவுசிலிருந்து குப்பையை ஏற்றிவந்தது தெரியவந்தது. இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் தூத்துக்குடி டுவிபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த சந்தியா என்பவரது உடல் என்பதை கண்டுபிடித்தனர். துணை நடிகையான சந்தியாவின் உடலை பார்த்த அவரது உறவினர்கள் கை, கால்களைப் பார்த்து, தூத்துக்குடியில் கடந்த பொங்கலன்று சென்னை சென்ற பின் காணாமல்போன சந்தியாதான் என தெரிவித்தனர். சந்தியா தம்பதிக்கு பிளஸ் டூ படிக்கும் மகளும், 5வது படிக்கும் மகளும் உள்ளனர்.
கொலையுண்ட பெண்ணின் கணவர் பாலகிருஷ்ணன் கடந்த 2010ல் காதல் இலவசம் என்ற படத்தை இயக்கியுள்ளார். தன் மனைவி சந்தியா பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அப்படத்தை தயாரித்துள்ளார். ஆனால் படம் ஓடவில்லை. எனவே வேறு வாய்ப்புகள் இல்லாத நிலையில், நண்பர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்துள்ளார்.
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார் பாலகிருஷ்ணன். இவரது மனைவியும் மகன் மகளும் சொந்த ஊரில் மாமியாருடைய வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தன் மனைவி வேறு ஒருவருடன் பழகுவதாக பாலகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. எனவே ஆத்திரத்தில் இருந்த பாலகிருஷ்ணன், பொங்கலை ஒட்டி, தன் மனைவி சந்தியாவை சமரசம் பேச அழைத்துள்ளார். அதன்படி சந்தியாவும் வந்துள்ளார்.
ஆத்திரத்தில் மனைவி சந்தியாவை கொலை செய்த பாலகிருஷ்ணன், அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி, பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் வீசி எறிந்தது தெரியவந்துள்ளது. (பொங்கல் முடிந்து அடுத்த இரு தினங்கள் சந்தியா அந்த வீட்டில் இருந்ததைப் பார்த்ததாக அருகில் உள்ளோர் கூறியுள்ளனர்.)
இதை அடுத்து, சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில், பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கிலேயே சந்தியாவின் மற்றொரு உடல் பாகத்தை கைப்பற்றினராம். ஆயினும் சந்தியாவின் தலை கிடைக்க வில்லை என்பதால், அதனைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இறந்த பெண்ணின் கையில் இருந்த டாட்டூவின் உதவியுடனும், காணாமல் போன பெண்கள் குறித்த புகார்ப் பட்டியலையும் கொண்டு சரிபார்த்து, இந்த வழக்கில் விரைவில் துப்பு துலக்கியதாகக் கூறினார்.