விழுப்புரம் அருகே, திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புக்குச் சென்று திரும்பிய போலீஸ் ஜீப் மோதியதில், மூன்று பேர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த கட்சிப் பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் பின்னர் புதுச்சேரிக்குச் சென்றார். அங்கே துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக தர்ணா மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் நாராயணசாமியை சந்திக்க சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து சென்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் புதுச்சேரியில் இருந்து மாலையில் விழுப்புரம் புறப்பட்டனர். இவர்கள் வந்த வாகனத்தை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை காவலர் பிரிவின் ஓட்டுநர் சரவணன் ஓட்டி வந்தார். இந்த வாகனம், மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை கடந்து விழுப்புரம் மாவட்டத்தின் கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகே வந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து தறிகெட்டு ஓடிய போலீஸ் வாகனம், எதிரே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் மீது மோதியது.
தொடர்ந்து வலதுபுற சாலையோரம் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி (வயது 60) என்பவர் மீதும் மோதி பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தில் மண்ணாங்கட்டி, மோட்டார் சைக்கிள்களில் வந்த கொண்டங்கியை சேர்ந்த முத்து மகன் பாபு(30), உளுந்தூர்பேட்டை தொப்பையான்குளத்தை சேர்ந்த காசிலிங்கம் மகன் திருமுருகன்(30) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.