கோவையில் சிறுமி கூட்டு பாலியல் கொடுமை செய்யப் பட்டு கொல்லப் பட்ட விவகாரத்தில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அவரது வீட்டின் அருகே கடந்த மார்ச் 26 ஆம் தேதி சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கையில், அந்த சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு கொலை செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமியின் வாயை துணியால் கட்டி அடைத்து, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வன்கொடுமை செய்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப் பட்டது!
தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவம் குறித்து உடனே விசாரித்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், குற்றவாளிகள் குறித்து விவரம் தெரிந்தால் அதனை தங்களுக்கு உடனே தெரிவிக்கும்படியும், தகவல் தருபவர் ரகசியம் காக்கப்படும், அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றெல்லாம் போலீசார் தகவல் வெளியிட்டனர்.
இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பில் விசாரிக்க போலீசார் 10 தனிப்படைகள் அமைத்தனர். விசாரணையும் நடத்தப் பட்டு வந்தது. இந்நிலையில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து அவரிடம் விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.