புதுச்சேரியில் 9ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி, அவரை வலையில் வீழ்த்தி, தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளர்.
புதுச்சேரி மாட்டுக்காரன்சாவடியைச் சேர்ந்த 13 வயது மாணவி அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற கல்லூரி மாணவர், இவரைக் காதலிப்பதாகக் கூறி தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.
வெள்ளிக் கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம், தான் தனியார் விடுதியில் அறை எடுத்திருப்பதாகவும், அங்கே சென்று பொழுது போக்கிவிட்டு வரலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
அதை நம்பி அந்த மாணவியும் அவருடன் தனியார் விடுதிக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார் அந்த மாணவர். அதன் பின்னர் அந்த மாணவி மயங்கியதும், அவரை பலாத்காரம் செய்த நரேஷ், தமது நண்பர்களான ராஜா (32), வெங்கடேஷ் (20) ஆகியோரை போனில் அழைத்துள்ளார். தொடர்ந்து மூவரும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப் படுகிறது.
இதனிடையே அந்த மாணவியின் தாயார், தன் மகளைக் காணவில்லை என்று ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து மாணவி குறித்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், தங்கள் வேலை முடிந்ததால் இரவு பத்து மணி அளவில் அந்த மாணவியை வீட்டின் அருகே மயக்க நிலையில் இறக்கி விட்டுள்ளார் அந்த மாணவர். பின் வீட்டுக்குச் சென்ற மாணவி நடந்தவை குறித்து தன் தாயாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து போலீஸில் தகவல் தெரிவிக்கப் படவே, சனிக்கிழமை நேற்று அந்தக் கல்லூரி மாணவர் நரேஷைக் கைது செய்த போலீஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜா, வெங்கடேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். பின், மூவரும் சிறையில் அடைக்கப் பட்டனர்.
தனியாக இருக்கும் பள்ளி மாணவிகள், இளம் பெண்கள் இது போல், விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டு, சிதைக்கப்படும் சம்பவங்கள், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து குடிக்கச் செய்து பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் வெகுகாலமாக செய்திகளிலும் ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கும் போதும், பெண்கள் இது போல் ஏமாறுவது பெரும் வேதனை அளிப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.