கோபி காட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 27). கோபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரண்யா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மிதுன் (4) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வசந்த குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம்.
மேலும், வீட்டுச் செலவுக்கு பணமும் கொடுக்காமல் வசந்தகுமார் இருந்ததால், அவரிடம் சரண்யா அடிக்கடி தகராறு செய்துள்ளார். சரண்யா வீட்டுச் செலவுக்கு பணம் கேட்டதால், கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த வசந்த குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டின் விட்டத்தில் மனைவியின் சேலையிலேயே தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்தகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வசந்தகுமாரின் உடலை பார்த்து அவருடைய மனைவியும் மற்ற உறவினர்களும் கதறி அழுதது அந்தப் பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.