சென்னை அருகே எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவி ஒருவர் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று ஒரு மாணவர் அதே போல், 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது மாணவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு, தாம்பரத்துக்கு நடுவே அமைந்த பொத்தேரி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் செளத்ரி என்ற மாணவர் ஈ.சி.ஈ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த அவர் இன்று காலை, 2 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அனுஷ் செளத்ரி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து பல்கலை.,வளாகத்துக்கு வந்த மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, நேற்று சென்னை பொன்னேரியைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு மாணவி அனுப்பிரியா, அதே பகுதியில் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட 24 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இப்படி தொடர்ந்து விபரீத முடிவுகளை எடுக்க என்ன காரணம் என்று, மறைமலைநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.