பொள்ளாச்சி அருகே பள்ளி செல்லும் மாணவிகளை ஆபாசமாகப் படம் பிடித்து அவர்களிடம் சில்மிஷம் செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளனர். அவர்கள், அந்தச் சிறுமிகளிடம் தங்களை காதலிக்கும்படி கூறி, அச் சிறுமிகளின் கையைப் பிடித்து இழுப்பதும், கட்டிப்பிடிப்பதும் என பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தாங்கள் செய்வதை மொபைல் போன்களில் வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் முறையிட்டு அழுதுள்ளனர். இதை அடுத்து மாணவிகளின் பெற்றோர் அந்த இளைஞர்களிடம் வந்து விசாரித்து, அவர்களைத் தட்டிக் கேட்டுள்ளனர். அதற்கு, அந்த மாணவிகளின் பெற்றோருக்கு அந்த இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் பயந்து போன அப் பெண்களின் பெற்றோர் காவல் நிலையத்திற்குச் சென்று அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.
இதை அடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த முகமது சபீர் மற்றும் அவனது நண்பர்கள் வசந்த குமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட செல்போன்களை ஆய்வு செய்த போலீஸார், அதில் உள்ள ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் மீது 5 குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், முகம்மது சபீர் என்பவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதை அடுத்து அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கெனவே பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்த செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் பொள்ளாச்சியில் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியரை இவ்வாறு டார்கெட் செய்யும் கும்பல்களால் பள்ளி மாணவிகளின் படிப்பு பாதிக்கப் படுவதுடன், பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும்கூட அச்சம் ஏற்படுகிறது!