பெருந்துறை சிப்காட் பகுதியில் குளிர்பான நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க அனுமதிக்கப்பட்டது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது!
இது தொடர்பாக நேற்று பொதுமக்கள் பெருந்துறை வட்டாட்சியரிடம் குளிர்பான கம்பெனிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்!
பெருந்துறை சிப்காட் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு குளிர்பான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பகுதியில் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என்றும் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரை உபயோகப்படுத்தி பொதுமக்களின் நீராதாரங்களை அழிக்கும் சூழல் உருவாகும் என்றும் புகார் எழுந்தது!
இதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன! தற்போது அந்த நிறுவனத்துக்கு அனுமதி ரத்து செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில் சுமார் 13 ஏக்கர் நிலம் தனியார் குளிர்பான நிறுவனத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது
மேலும் இவர்கள் கட்டிட பணிக்காகவும் குளிர்பான தயாரிப்பு களுக்காகவும் தற்போது தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்
தற்போது நிலவி வரும் கடும் குடிநீர் பற்றாக்குறை நேரத்தில் இதற்கு அனுமதி கொடுத்துள்ளது இப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தனியார் குளிர்பான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ள சிப்காட் நிர்வாகத்தை கண்டிக்கிறோம்! இப்போது தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை பயன்படுத்தும் இந்த நிறுவனம் குளிர் பானங்களைத் தயாரிக்கும்போதும் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும்! இதனால் 50க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து சுற்றுப்புறத்தில் உள்ள நீர் ஆதாரங்களை முற்றிலும் அழித்து விடுவார்கள்!
இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு நீர் சுற்றுவட்டார பகுதியை மாசடையச் செய்யும்! பெரும் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும்! எனவே இந்தக் குளிர்பான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினர்!
– கே.சி.கந்தசாமி