திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாகப் பணிபுரிவர் ஹரிஹரன் (வயது 40)! இவர் நேற்று மதியம் உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து சென்றபோது மீன் வியாபாரியான ரவுடி உக்கடை இஸ்மாயில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், ஏட்டு ஹரிஹரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஏட்டு ஹரியின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த நபர் ஓடி விட்டார்.
ரவுடி இஸ்மாயில் அரிவாளால் வெட்டியதில், ஏட்டு ஹரிக்கு தலை மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டது. ரத்தம் அதிகம் வெளியேறியது. இதை அடுத்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏட்டு ஹரிஹரன் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் போது சம்பவம் நடந்துள்ளதால் வெட்டிய நபர் ரவுடித்தனமாக உள்நோக்கத்துடன் அடையாளம் தெரிந்து வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
பட்டப்பகலில் இவ்வாறு ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, சம்பந்தப் பட்ட நபரைத் தேடிக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்ததாகவும், கை முறிவு ஏற்பட்ட நிலையில் அவரின் படமும் சமுக வலைத்தளங்களில் வைரலானது. அதில், திருச்சி அரியமங்கலத்தில் நேற்று தலைமைக் காவலர் ஹரியை வெட்டிய இஸ்மாயில், பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் இஸ்மாயிலின் இரு கையும் முறிந்தது! – என்று தகவல்கள் பகிரப் பட்டன.