பல துறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலம்; விஞ்ஞானம் என்றதில் டிக் டாக் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்று மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், புத்தகங்கள் தான் வாழ்வில் மக்களை மேன்மையடையச் செய்யும் என்றும் கரூர் புத்தகத் திருவிழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
கரூரில் 3 வது புத்தகத் திருவிழா சில தினங்களுக்கு முன்பு தொடங்கி மூன்றாவது நாளாக ஞாயிறும் நடைபெற்றது.
இந்த நிலையில், புத்தகத் திருவிழாவில், போதையில் பயணம், பாதையில் மரணம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கொளரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., உள்ளங்கையில் உலகம் என்ற வகையில் விஞ்ஞானம் உயர்ந்துள்ளது. அந்த விஞ்ஞானத்தினை வைத்து ஒரு மாணவரை உயர்த்திக் கொள்ளவும், தாழ்த்திக் கொள்ளவும் முடியும்!
டிக் டாக் என்ற செயலி, சமூகத்தினை சீரழிக்கும்! ஆகவே தான் தமிழக அரசு தொடர்ந்து அதை எதிர்த்து, அதை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மாணவ, மாணவிகள் யார், என்ன ஆக வேண்டுமென்றாலும், அவர்களுடைய எண்ணத்தினை ஒருநிலைப்படுத்தி நன்கு படிக்க வேண்டும்! கல்வித் துறைக்கு மட்டும் இந்திய அளவில் தமிழகத்தில் தான் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்களை பள்ளிக் கல்வித்துறைக்காக வாரி வழங்கி இருக்கின்றார்கள்.
அதே போல தான் 29 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுத்துள்ளோம்! எனவே படிப்பதற்காகவும், நல்ல கல்வி கற்கும் மாநிலமாகவும், இந்திய அளவில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாக விளங்குகின்றது!
தற்போதைய சூழலில் புத்தகத்தினை படிப்பதற்கு பதில் ஒரு கையில் செல் போனை மட்டுமே வைத்துக் கொண்டு அதில் மாணவர்கள் ஆழ்ந்துள்ளார்கள். தேவையில்லாமல் செல்போனை நோண்டுவதற்கு பதில் மனித வாழ்வில் பொக்கிஷமாக விளங்கும் புத்தகங்களை படிக்க வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர்கள் எல்லாம் புத்தகங்கள் படித்துதான் பல மொழிகளில் பேசினார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 8 மொழிகள் தெரியும்! அவர் சட்டசபையில் எந்த நேரத்தில் எந்த வகையான கேள்விகளைக் கேட்டாலும் அதற்கு திறம்பட பதில் கூறும் வல்லமை பெற்றவர்!
அவருடைய அந்தத் திறமைக்கு மூல காரணம் புத்தகங்களே! ஆகவே புத்தகங்கள் நம்முடைய வாழ்வில் ஒரு பொக்கிஷம் என்று எண்ணிப் பார்த்து அதை பயனுள்ளதாக்க வேண்டும்… என்று மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறினார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.