கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்தார். அப்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவரிடம் விவாதித்தார். திமுக., எம்.பி.யும், மத்திய முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக., தலைவர்கள் உடன் இருந்தனர்.
ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருந்த தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
இந்தித் திணிப்பை என்றுமே நாங்கள் எதிர்ப்போம். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் தெரிவித்தோம். மத்திய அரசு எந்த வகையிலும் இந்தியை திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்று போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் என்றார்.
திமுக.,வின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. வேறு வழியில்லை. இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினால் திமுக.,வினர் நடத்தும் பள்ளிக் கூடத்தில் இருக்கும் ஹிந்தியை எப்போது எதிர்ப்பீர்கள் என்று மக்கள் கேட்பார்களே என பாஜக.,வினர் இதற்கு விமர்சனம் செய்தனர்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின். அதில், ஆளுநருடான சந்திப்பின்போது அவர் கொடுத்த உறுதி – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ஊடகங்களில் கொடுத்த விளக்கம் ஆகியவற்றை மனதிற்கொண்டு 20-ம் தேதி நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்தி எந்த நிலையில் திணிக்கப்பட்டாலும் நிச்சயமாக எதிர்ப்போம்! – என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…