சென்னை: இந்துக்கள் பண்டிகையான தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை என்று விதிக்கப்பட்ட நீதிமன்ற நேரக் கட்டுப்பாட்டை தளர்த்தக் கோரியும் மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்ற தலையீடுகளை தடுக்கக் கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் அளித்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் சமர்ப்பித்துள்ள மனுவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…
அதர்மம் அழித்து , தர்மம் காத்திட நரகாசுரனை வென்று கண்ணபிரான் வெற்றி கண்ட நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது தமிழர்களின் பாரம்பரிய மரபு .
இந்த தீபாவளிப் பண்டிகை . தீபாவளி அன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புனித நீராடி, புத்தாடை அணிந்து , பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது பாரம்பரியமாக இருந்து வரக்கூடிய மரபு.
இந்த மரபை அழிக்கவேண்டும்; சிதைக்க வேண்டும், என்ற கெட்ட உள்நோக்கத்தோடு பல வெளிநாட்டு சக்திகள் துணையோடு புகையில்லா தீபாவளி, சத்தமில்லா தீபாவளி என்று பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள் .
இப்படி செய்கின்ற காரணத்தினால் சிவகாசியில் பட்டாசு தொழிலால் பயன்படக் கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, என்பது மட்டுமல்ல இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.
ஆகவே தொழிலாளர் வாழ்வை காப்பதற்கும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும்,
பட்டாசு தொழில் அழிந்துவிடாமல் காப்பதற்கும, சீனாவில் இருந்து வரக்கூடிய பட்டாசுகளை தடுக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை.
அதுமட்டுமல்லாது பட்டாசு வெடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றமானது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என நேரக் கட்டுப்பாடு விதித்து இருக்கிறது .
இது முழுக்க முழுக்க இந்து-விரோத தன்மையை காட்டுகிறது.
நீதிமன்ற உத்தரவு என்பது பல்வேறு நேரங்களில் இந்துக்களுடைய வழிபாட்டு முறையை சிதைத்து ,முடக்க வேண்டும் என்பதாகவே அமைந்திருக்கிறது.
இது கடந்த கால வரலாறு . உதாரணமாக பூசணிக்காய் உடைக்கக்கூடாது, ஆயுத பூஜை கொண்டாடவேண்டாம், பிள்ளையார் சதுர்த்தி விசர்ஜனம் செய்ய 24 கட்டுப்பாடுகள், இதன் தொடர்ச்சியாக தற்போது தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இந்த நேரக் கட்டுப்பாடு இது இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் தேவையற்ற தலையிடுவதாக இந்துக்கள் எண்ணுகிறார்கள்.
மக்களின் உணர்வுகளை நீதிமன்றங்களில் பிரதிபலிக்காமல் அரசு வழக்கறிஞர்கள் இருப்பது வேதனையளிக்கிறது என்பது மட்டும் அல்ல வெறுப்பை உண்டாக்குகிறது.
. இது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது நாளை தீபாவளி அன்று இந்த உடைதான் போட வேண்டும் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டுதல் கூட நாளை வரலாம் என இந்துக்கள் அச்சப்படுகிறார்கள்.
ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு நீதிமன்றங்கள் மதரீதியான வழிபாட்டு உரிமைகளில் தலையிட வேண்டாம் .
மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டாம் என தமிழக அரசு ஒரு சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் இந்த கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கிறோம். – என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்!