விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப் பட்டுள்ளது அரசை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ள தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மீதும் அதில் நடித்துள்ள விஜய் மீதும் திரையிட்ட திரை அரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது செய்தியாளர்கள் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், சர்கார் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர், நடிகர் விஜய் மற்றும் திரையிட்ட திரைஅரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது மக்களை வன்முறைக்கு தூண்டும் செயல் என்றார்.