தமிழ்நாட்டில் திமுக ஆதரவாளர்களால் தான் கொரோனா பரவியதாக தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தமிழ் பண்பாட்டின் மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார் என தெரிவித்தார்.
ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரியை தமிழகத்திற்கு தந்தவர் பிரதமர் மோடி எனவும், மதுரையில் எய்ம்ஸ் கனவை சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 180 ஆக இருந்த கூலி 200 ஆக உயர்ந்துள்ளது எனவும், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு 9.5 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கோவையில் ஜூன் முதல் வாரத்தில் மட்டும்145 கோடி ரூபாய் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிறுவாணி அணையில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீர் கேரள அரசால் தடுக்கப்பட்டு வருகிறது எனவும், ஆனால் கம்யூனிஸ்ட்கள் அதை தட்டி கேட்காமல் நாதியற்று கிடக்கிறார்கள் என கூறினார்.
பெட்ரோல் டீசல் விலையை ஜி எஸ்.டி கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம் எனவும், மாநில அரசுகளின் ஒப்புதலோடு பெட்ரோல்- டீசல் விலைகள் ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வரப்படும். என்றும் அவர் தெரிவித்தார்.
சிறுவாணி அணை விவாகரத்தில் கேரளாவோடு மோதல் போக்கை மேற்கொள்ளாமல் பேசி தீர்க்க வேண்டும் என மாநில அரசு எண்ணுவதாகவும், இலவச மின்சாரம் திட்டம் ஒரு போதும் ரத்து செய்யப்படாது, இலவச மின்சாரம் ரத்து என்பது திமுகவின் அடுத்த பொய்பிரச்சாரம் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா இறப்பு விவகாரத்தில் புள்ளி விவரங்களில் சிறு பிழை இருந்துள்ளது, அதனை தமிழக அரசே ஒப்புக்கொண்டு அதனை சரிசெய்துள்ளது எனவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் திமுக ஆதரவாளர்களால் தான் கொரோனா பரவியது எனவும், ஜமாத்தில் பங்குபெற்றதன் காரணமாகதான் கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவியது என சொல்லாமல் எதிர்கட்சிகள் தயங்கியது ஏன் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் அரசு எடுக்கின்ற நல்முயற்சிகளை எதிர்க்கக்கூடாது எனவும், ஆளும் அரசின் தவறுகளை சுட்டி காட்டி நல்முயற்சிகளை வரவேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் வழிப்பாட்டு தலங்கள் திறப்பு விவகாரங்களில் தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், தற்போது கொரோனா பரவல் சென்னையில் இருப்பதால் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டாம் என தமிழக அரசு எண்ணுகிறது. அதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்… என்று அவர் கூறினார்.