கோவை கந்தேகவுண்டன் சாவடியில் இ-பாஸை முறைகேடாக பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் சென்று மோசடியில் ஈடுபட்ட வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுக்கரை காவல் ஆய்வாளர் அளித்த தகவலின் பேரில் எட்டிமடை போலீசார் கோவை கந்தேகவுண்டன் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை மாநகருக்குள் வந்த பிரதர்ஸ் ஹாலிடேஸ் என்ற வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த நிறுவனம் கொச்சியில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல தங்களை அணுகலாம் என்று பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். கேரளாவில் இருந்து கோவை மார்க்கமாக செல்ல அனுமதி வாங்கப்பட்ட நிலையில், விதிமுறைகளுக்கு மாறாக பாலக்காடு, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகப்படியான பணம் வசூல் செய்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்று வந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குபதிவு செய்து ஓட்டுனர் முஹம்மது ஷபத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.