பாஜக., மாநில தலைவர் அண்ணாமலை பாதுகாப்பில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மெத்தனம் கண்டனத்துக்குரியது என்று, பாஜக., விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை…
நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு கொங்கு குலாலர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஸ்ரீவள்ளியம்மன் நம்பியண்ணன் கோவிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பொங்கல்விழாவிற்கு கோவில் கமிட்டியின் அழைப்பையேற்று வருகைபுரிந்த மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் பாதையில் போக்குவரத்தை சரிசெய்யாமல் திட்டமிட்டே மெத்தனம் காட்டி Zபிரிவு பாதுகாப்பிலுள்ள தலைவரை இரண்டுமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதப்படுத்தி கொங்கு குலாலர் விழாவில் பங்கேற்க விடாமல் தடுக்க முற்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.
மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு வருகைபுரிய வேண்டிய தலைவர் மதியம் 2 மணி வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்க, பாஜக விவசாய அணி நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தும்,போக்குவரத்தை சரிசெய்யக்கோரியபோது தங்களால் இயலாது என்று கைவிரித்தார்கள்.பின்னர் கோவில் கமிட்டி நிர்வாகிகள்,பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நடைபயணமாகச் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த மாநில தலைவரிடம் நிலைமையை விளக்கிய பின்னர் 2கி,மீ நடந்தே வந்து பொங்கல்விழாவில் கலந்துகொண்டார்.வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தார்கள்.ஆனால் காவல்துறை Zபிரிவு பாதுகாப்பிலுள்ள தலைவருக்கு உரிய போக்குவரத்தை சரிசெய்ய தவறிவிட்டது.
அதேசமயம் அதன் அருகில் வருகைபுரிந்த அமைச்சர் உதயநிதிக்கு அளவற்ற போலீசை குவித்து,போக்குவரத்தை சீர்செய்து மக்களை சாலைஓரமாக நிற்கவைத்து அமைச்சர் உதயநிதிக்கு கூட்டம் சேர்த்தது காவல்துறை.ஆனால் 16 ஆண்டுகளுக்குப்பிறகு 5 இலட்சத்திற்கு மேற்பட்ட கொங்கு குலாலர் மக்கள் கூடிய பொங்கல்விழாவிற்கு வருகைபுரிந்த மக்களை போக்குவரத்தில் சிக்கி அவர்கள் குலதெய்வத்தைக்கூட வழிபட முடியாமல் திண்டாடவிட்டது காவல்துறை.
காவல்துறையின் திட்டமிட்ட மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது. இப்பாதுகாப்பு குறைபாடு குறித்து முழுமையான தகவலை பாஜக தரப்பில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.