கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் இன்று முக்தி அடைந்தார். அவரது திருமடத்தின் அன்பர்களுக்கு தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில்…
கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சன்னிதானம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் இன்று முக்தி அடைந்துள்ளார்.
ஆன்மீகத்திற்காகவும்இந்து சமுதாய ஒற்றுமைக்காகவும்
அரும்பாடுபட்டவர் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள். இந்துக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக களத்தில் இறங்கி குரல் கொடுப்பவர்.தமிழகத்தில் நாத்திக சக்திகளால் கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்ட போது, இந்துக் கடவுள்களை யார் இழிவாக பேசினாலும் அவர்களின் நாக்கை கூட அறுக்க தயங்க தேவையில்லை என்று பொதுவெளியில் பகிரங்கமாக பேசியவர்.
ஆதீனங்கள் என்றாலே பூஜை புனஸ்காரங்களோடு
தங்கள் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லாமல் இந்து தர்ம போராளியாக ஏற்றத்தாழ்வுகளை களைந்திடும் புரட்சியாளராக வாழ்ந்தவர் சிவலிங்கேஸ்வரர் ஸ்வாமிகள்.
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் C.சசிகுமார் அவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேள்விப்பட்டவுடனே இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்களோடு தொடர்பு கொண்டு அன்று காலையிலேயே கோவை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து சசிகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மயானம் வரையில் வந்து அஞ்சலி செலுத்திய துறவி.
தமிழகத்தில் பல கோவில்களின் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியவர். கோவையில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு விதமான சேவைப் பணிகளை செய்தவர். 2019 ஆம் ஆண்டு பொங்கலூர் பகுதியில் இந்து முன்னணி பேரியக்கம் சார்பாக 1008 கோமாதா பூஜை ஒரு லட்சம் குடும்பங்கள் பங்குபெற்ற சோடஷ மகாலட்சுமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சாமிகள் இந்து முன்னணி பேரியக்கத்திற்கு உறுதுணையாக நின்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்து முன்னணி பேரியக்கத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்திடுவார். விடுதலைப் போராட்ட வீரர்களின் மீது தீரா பக்தி கொண்டவர். இளைய தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை எடுத்துக் கூறுவதில் பேரார்வம் உடையவர்.
புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆதீனங்களில் இவரும் ஒருவர்.
மிகச் சிறந்த பேச்சாளர். தேசியவாதி ஆன்மீகவாதி என்ற பல முகங்களைக் கொண்ட சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் மறைவு இந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் சீடர்கள் மற்றும் பக்தர்களுக்கு இந்துமுன்னணி ஆறுதல் கூறுகிறது..
சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் ஆன்மா எல்லாம் வல்ல ஈசனின் திருப்பாதங்களில் இளைப்பாற இந்துமுன்னணி வேண்டிக் கொள்கிறது.. – இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட்ட குறிப்பில்,
சிவ சிவ!!! சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் காமாட்சிபுர ஆதீனம். தமிழ்த்தொண்டு, ஆன்மீக தொண்டு மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். என் மேல் நல்அன்பும் பாசமும் கொண்டவர். இன்று அவர் முக்தியடைந்தார் எனபதை கேள்விபட்டு வெறுமை அடைகிறேன். ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட குறிப்பில்,
வணக்கத்திற்குரிய கோவை காமாட்சிபுரி ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள், இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர். புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்புவிழாவில் பங்கு கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர்.
ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளைப் பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி ! – என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஶ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் முக்தி அடைந்த நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் வெளியிட்ட குறிப்பு…
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சித்தி அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டு கோவையில் காமாட்சி புரி ஆதீனத்தை உருவாக்கி இறைப்பணியோடு சமூக பணியையும் மேற்கொண்டு வந்தவர். தவத்திரு காமாட்சிபுரி ஆதீனம் அவர்கள்
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பு இல்லங்களை நடத்தி வந்த சுவாமிகள் ஹிந்து சமுதாயத்திற்கு பிரச்சனை வரும்போது நேரடியாக களத்தில் இறங்கி போராடவும் தயங்காதவர், தீண்டாமையை போக்குவதில் பெரும் பங்காற்றியவர். ஹிந்து சமுதாயத்திற்கு எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமாக குரல் கொடுத்து வந்தவர்.
விசுவ ஹிந்து பரிஷத் பேரியக்கத்துடன் பணியாற்றி வந்த சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் திடீர் இழப்பு ஹிந்து சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் பக்தர்கள் ஆதீனத்தை சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பூஜ்ஜிய சுவாமிகள் ஆன்மா நம்மை தொடர்ந்து வழிநடத்த பிரார்த்தனை செய்கிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.