- பழமையான பூண்டி வெள்ளியங்கிரி மலையில் சுகாதார சீர்கேடு !
- குப்பைக்கிடங்காக மாறிப்போன அடிவாரம்.
அலட்சியப் போக்கில் அதிகாரிகள் ! - மாலை 6:00 மணிக்கே கோவிலுக்கு பூட்டு.!
- உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் !
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை :
தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலுக்கு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை லட்சக்கணக்கான மக்கள் மலையேறுகிறார்கள். பூண்டி அடிவாரத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அப்படிப்பட்ட இத்திருக்கோவிலில் அடிப்படை வசதிகள்
ஏதுமின்றி பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
வாகன நிறுத்துமிடம் ,கழிப்பிட வசதி என ஏதும் கிடையாது. போதாக்குறைக்கு குப்பைகள் அள்ளப் படாமல் கால் படும் இடமெல்லாம் சாப்பிட்டு போட்ட இலைகளும் வாட்டர் பாட்டில்களும் குப்பைகளும் என குப்பைக் கிடங்காகவே காட்சியளிக்கிறது.
இதுபற்றி பணியாளர்களிடம் கேட்டால் காலை 6:00 மணிக்கு வர வேண்டிய சுகாதாரப் பணியாளர்கள் 10 மணிக்கு மேல் தான் வருவதாக சொல்கிறார்கள். ஆனால் வந்தபாடில்லை என அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே இந்துமுன்னணி பேரியக்கம் சார்பில் கோவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என மனு தந்த போதிலும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருவிழா காலங்களில் மலையேறும் பக்தர்களுக்கு எந்த விதமான மருத்துவ வசதியும் செய்து தராமல் அலட்சியம் காட்டியதால் கடந்த மூன்று மாதத்திற்குள் மட்டும் மூன்று பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் .
பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை நிர்வாகம் சார்பாக எந்த ஒரு ஏற்பாடும் இல்லை,
பக்தர்கள் கொண்டுவரும் உடமைகளை வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் ஏதும் இல்லை.
பக்தர்கள் தங்கள் காலணிகளை விடுவதற்கு கூட போதிய இடம் ஒதுக்கப்படவில்லை. கோவிலை பராமரிக்க ஆட்கள் பற்றாக்குறை தன்னார்வலர்கள் உழவாரப்பணி செய்ய நினைத்தாலும் ஆயிரம் விதிமுறைகளை அடுக்குகின்றனராம்.
வெள்ளிங்கிரி கிரி மலையேறினால் மூச்சு திணறாது ஆனால் அடிவார கோவில் பக்கம் வந்தாலே மலைபோல் குவிந்து குப்பை கிடங்கின் துர்நாற்றத்தால் மூச்சு திணறல் ஏற்படும் நிலையுள்ளது. குறிப்பாக பெண்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை இருப்பினும் பல நூறு பெண்கள் இப்போதுவரை ஏறி உள்ளனர் அதை கண்டும்காணாமல் நிர்வாகம் செயல்படுகிறது.
மலையேறிய பக்தர்கள் ஓய்வெடுக்க எந்தஒரு ஏற்பாடும் செய்து தரப்படுவதில்லை. மலை ஏறிய பக்தர்கள் ஓய்வின்றி தங்கள் வாகனங்களை ஒட்டிச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பல நபர்கள் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் பூண்டி அடிவாரத்தில் தினம் தோறும் மூன்று வேளை அன்னதானம் கொடுக்கிறார்கள்.
பூண்டி கோவில் நிர்வாகமும் தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் முறையாக பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தவிர இருசக்கர வாகனம் திருட்டு பெட்ரோல் திருட்டு தொடர்ந்து குற்றச் செயல்களும் நடைபெற்று வருகிறது.
இப்படி பூண்டி கோவில் முழுக்க அறநிலையத் துறையின் அலட்சியப் போக்கு தொடர்கிறது . பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும்
பெரிய அளவில் வைத்திருக்கிறது.
பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் நடைபெறும் இந்த நிர்வாக சீர்கேட்டை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மலையேறும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனைத்து விதமான வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும். இல்லையேல் பொதுமக்களையும் பக்தர்களையும் திரட்டி இந்து முன்னணி பேரியக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தும்.