வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தது. வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தது.
தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக வைகை அணை விளங்கிவருகிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 41. 88 அடியாக உள்ளது. அணையிலிருந்து தேனி, ஆண்டிபட்டி, வத்தலகுண்டு, சேடப்பட்டி மற்றும் மதுரை மாவட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையில் வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. முதல்நாள் வினாடிக்கு, 1500 கன அடி, இரண்டாவது நாள் 850 கன அடி, மூன்றாவது நாள் 300 கன அடி திறக்கப்பட்டு, படிப்படியாக குறைக்கப்படும். அணையில் மே 28 வரை தண்ணீர் நிறுத்தப்படும்.
மூன்று நாட்களுக்கு வைகை அணையில் இருந்து மொத்தம், 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் பெருகும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மதுரை யானைக் கல் பாலம் அருகே இன்று காலையில், வைகை நீர் வந்தடைந்தது. ஆற்றில் வந்த தண்ணீரின் மீது பூக்களை தூவி மதுரை மக்கள் வரவேற்றனர்
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை