மதுரை: மதுரை மாவட்டம் வண்டியூர் சாலையில் வைகையாற்று தேனூர் மண்டபம் அருகே நடுகல் வீரனுடன் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலக்கல் ஒன்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை அருகே வண்டியூர் செல்லும் சாலையில் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தின் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் வீரன் சிலையோடு, 400 ஆண்டுகள் பழமையான திரிசூலமும், தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்ட சூலக்கல் ஒன்றை சிற்ப ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம் கண்டறிந்தார். அப்போது தொல்லியல் ஆய்வாளர்கள் சசாங்கன் மற்றும் அறிவுச்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து தேவி கூறுகையில், ‘பாண்டி நாட்டுப் பகுதியில் இதுபோன்ற சூலக்கல், பண்டைய காலத்தில் மன்னர்கள் அல்லது அவர்களைச் சார்ந்த குடும்பத்தார் அல்லது அதிகாரிகள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக எழுதி வைப்பது மரபு. சிவன் கோவில்களுக்கு அவ்வாறு நிலங்களை எழுதி வைக்கும்போது, அதன் எல்லையில் இதுபோன்ற சூலக்கல்லை நட்டு வைத்தனர்.
அக்கல்லில் அது சார்ந்த விபரங்களையும் எழுத்துக்களாக பொறிக்கும் வழக்கம் உண்டு.
இதுபோன்ற சூலக்கல் மதுரையில் நிறைய இடங்களில் காணப்படுகிறது. அவற்றுள் சிலவற்றை நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இதன் கீழே உள்ள தமிழ் எழுத்துக்கள் தரும் விபரங்களை வல்லுநர்களின் துணை கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு பெயர்களில் இதனை வழிபடுகின்றனர். கல்லாணை என்ற பெயரிலும் வழிபாடு நடத்துகின்றனர்.
இதுபோன்ற பழமையான சின்னங்களின் அருகில் அது சொல்லும் வரலாற்றை சிறிய குறிப்புகளாக அதன் அருகிலேயே அறிவிப்பு பலகையாக வைக்க தொல்லியல்துறையும், அந்தந்த பகுதி மக்களும் முன் வந்தால் சிறப்பாக இருக்கும்’ என்றார்.