நடிகர் விவேக் படித்த அமெரிக்கன் கல்லூரியில், கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்!
விவேக் வைத்த மரங்களில் இருந்து வரும் ஆக்சிஜன் காற்றாக கல்லூரியின் நினைவில் இருந்துகொண்டே இருப்பார் என கல்லூரி முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டார்.
மறைந்த நடிகர் விவேக் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1978 –1981 ஆம் ஆண்டு காமர்ஸ் பிரிவில் படித்தார். இதன் பின்னர் நாடக நடிகராக இருந்து, சினிமாவில் நடித்து மிகப்பெரும் நடிகராக உருவாகி தனது சிந்தனை நிறைந்த நகைச்சுவையால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
நடிகர் விவேக் இன்று அதிகாலை இயற்கை எய்திய நிலையில் அவர் கல்லூரிப் படிப்பை முடித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக் உருவப்படத்திற்கு கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், அவரது கல்லூரி நண்பர்கள் மற்றும் பேராசிரியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் கிறிஸ்டோபர் பேசுகையில் : எங்கள் கல்லூரி மாணவரான விவேக் மறைவு ஈடுசெய்ய இயலாதது. அவர் மறைந்தாலும் எங்கள் கல்லூரியில் அவர் நட்டுவைத்த மரங்களில் காற்றாக வாழ்ந்து கல்லூரியில் நினைவாக இருப்பார் என்றார்.
அவரது கல்லூரி நண்பர்கள் குறிப்பிடுகையில், நண்பனின் இழப்பு ஏற்க முடியவில்லை, சினிமா இயக்குனராக வருவார் என எதிர்பார்த்தோம், ஆனால் இவ்வளவு விரைவாக தனது வாழ்வை முடிப்பார் என்பதை ஏற்க இயலவில்லை என்றனர்.