ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 50 லட்சம் கைப்பற்றப்பட்டது என்று தகவல் வெளியானது. ஆண்டிப்பட்டியில் போலீசார் துப்பாக்கிச்சூடு! ஆண்டிப் பட்டியில் தினகரன் தேர்தல் அலுவலகத்தில் பணம் பட்டுவாடா நடத்தப்பட்டது போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் 4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் போலீசார் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத் குமார், காங்கிரஸ் தரப்பில் இளங்கோவன். அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் பணப் பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்தது.
வந்த புகாரின் அடிப்படையில் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் சோதனை நடத்த டிஎஸ்பி., சீனிவாசன் தலைமையிலான பறக்கும் படையினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
இந்நிலையில் அங்கே குவிந்திருந்த தொண்டர்கள் போலீசாரை தடுத்ததுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மின்தொடர்பைத் துண்டித்து, இருளில் மூழ்க வைத்து, பணத்தை அள்ளிச் செல்ல பலரும் முற்பட்டனர்.
இதனால், போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்காப்புக்காக வானத்தை நோக்கி சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எஸ்பி., பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.