ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர், இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதை அடுத்து, தாம் கைதாவதில் இருந்து தப்பிக்க, தனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி, இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரிய மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது எனக் கூறி பா.ரஞ்சித்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.