கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டு 95 ஆவது ஆண்டு விஜயதசமியை முன்னிட்டும், நேதாஜியின் ஐ.என்.ஏ. மூலம் அறிவித்த ஆஸாத் ஹிந்த்-ன் 75ஆம் வெற்றி ஆண்டு, ஜாலியன்வாலாபாத் படுகொலையின் 100ஆவது நினைவு ஆண்டு ஆகியவற்றை முன்னிட்டும் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலம் கோவில்பட்டி பிரதான சாலை லட்சுமி மில் மேம்பாலம் அருகே தொடங்கியது.
இந்த ஊர்வலத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்டச் செயலர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்தோசம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
லட்சுமி மில் மேம்பாலம் முன்பிருந்து புறப்பட்டஊர்வலம் பிரதான சாலை, புதுரோடு, எட்டயபுரம் சாலை வழியாக காந்தி மைதானம் வந்தடைந்தது.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கோவில்பட்டி ஸ்ரீ முத்தானந்த சுவாமி மடம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சொரூபானந்த சுவாமிகள், ப்ராந்த கிராம விகாஸ் ப்ரமுக்கைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோர் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.